Pages

Thursday, December 25, 2014

கே.பாலசந்தர் சாரும் கட்டுடைத்தலும்


திரை மரபு கட்டுடைத்தலில் தீவிரமாக தனது திரை பயணம் முழுக்க இயங்கியவர் கே.பாலசந்தர் ஸார் அவர்கள். 

காலங்காலமாக திரையில் கோவிலுக்கு சென்று விட்டு வரும் பெண் எப்பொழுதும் சமூக அகராதியில் நல்ல குடும்ப பெண் என்ற அடையாளத்தில் காட்டி வந்தது தமிழ் திரையுலகம். ஆனால் தனது தப்பு தாளங்களில் நாயகி கோவில் போய் வந்து வீட்டில் பாலியல் தொழில் செய்வது போல் காட்டி இருப்பார். அதில் அந்த நாயகிக்கு கோவிலுக்கு போவது மனம் சார்ந்த ஒரு விஷயம். 

அதே போல் பிராமண பெண் ஒருவள் சமூகத்தால் வஞ்சிக்கபட்டு வேறு வழியில்லாமல் பாலியல் தொழில் செய்வது போல் காட்டி இருப்பார். குறிபிட்ட ஜாதியினர் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது என்பது போல் மறைபொருளாய் சொல்லி இருப்பார். 

மனதில் உறுதி வேண்டும் படத்தில் விவாகரத்து பெற்று வந்த நாயகி தனது முன்னாள் கணவனின் இரண்டாவது மனைவி உண்டாகி இருப்பதை கண்டு, நாயகி சென்று அவளுக்கு வாழ்த்துக்கள் கூறி பரிசுகள் தருவது போல் காட்டி இருப்பார். 

கதாநாயகன் என்றால் ஒழுக்கசீலன், யோக்கியன், நல்லவன், நாயகியை தவிர்த்து எல்லா பெண்களையும் சகோதரிகள் போல் எண்ணுபவன் என்று காட்டி திரையுலகத்தினர் கல்லா கட்டி வந்த நேரத்தில், அக்காலத்தில் காதல் மன்னன் என்று பெயர் பெற்று வந்த ஜெமினி கணேசனை பெண்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து நான் அவன் இல்லை படத்தை எடுத்தார். 

திரையில் கடத்தல் கதையை ஒரு மாதிரியாக எது மாதிரியாகவும் இல்லாமல் எடுத்து கொண்டு இருந்த காலத்தில் இவரது நாணல் ஒரு முன்மாதிரி.

குப்பை தொட்டியில் இன்னும் தேடினால் சோஷியலிசம் கூட கிடைக்கும் என்று வெளிபடையாக பேசி வந்த வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் நாயகிக்கு காம உணர்வு வந்து கற்பனையில் நாயகனோடு இச்சையில் கலவியில் ஈடுபடுவது போல் காட்டி இருப்பார். அது வரை அந்த உணர்வு எல்லாம் நாயகனுக்கானவை என்று திரையுலகத்தினர் வரையறை வைத்து கொண்டு படங்களை சந்தை படுத்தி கொண்டு வந்தனர். 

ஒரு கட்டத்தில் இம்மாதிரியான கட்டுடைத்தலே கே.பாலசந்தர் ஸார் அவர்களது படத்துக்கு தனிபெரும் ரசிகர் சந்தையை உருவாக்கி தந்தது. இந்த கட்டுடைத்தல் தாக்கத்தினால் 1980களில் பல புரட்சி பேசி வெளிவந்து தோல்வி அடைந்தன. முக்கியமாக காம மோகம் கொண்டு அலையும் தந்தையை மடை மாற்றி விடும் மகன் கதாபாத்திரம் கொண்டு வந்த சுமைகள். 

விவாகரத்து பெற்று பிரிந்து போன மனைவிக்கு கணவனே வந்து மாப்பிள்ளை பார்க்கும் படலம் கொண்டு வந்த பார்த்தாலே பரவசம் படம் இவரது கைவண்ணத்தில் வந்தது தான். 

சாகச பிம்பம் எதுவும் இல்லாத பிறரை அண்டி பிழைக்கும் நாயகனை வைத்து எதிர் நீச்சல் படம் பண்ண யாருக்கு அக்காலத்தில் துணிச்சல் வரும். அந்த துணிச்சலின் பெயர் தான் கே.பாலசந்தர் ஸார். 

No comments:

Related Posts with Thumbnails